Saturday, December 10, 2011

கடவுள் பற்றிய சந்தேகங்கள்

ஆழி நீரிலும் குருதி கொப்பளிக்க
ஊழித்தாண்டவம் ஈழத்தை மேய்ந்தது.
கல் வைத்த பதியெங்கும்
கண் மூடி மன்றாடி
கூப்பிட்டுக் கட்டியழுதபோதும்
பலிகொண்ட துப்பாக்கி
தின்னத் துரத்த
ஊழன்று அலைந்து
கருகி எரிந்து
மக்கி மண்ணாகியபோதும்
காலம்தோறும்
அசுரரை அழிக்க
கதைகளில் வந்த
கடவுளர் ஒருவர் கூட பிறந்து வரவில்லை.

சூலமும் வேலும் ஏந்தி
வீரமும் தீரமும் காட்டி
வீற்றிருந்த கடவுளர் எவரும்
குண்டுகள் விழுந்து
கூரைகள் சிதைந்து
கோயில்கள் எரிந்தபோதும்
தம் அங்கங்கள் உடைந்து
அலங்கோலமாய்ப் போனபோதும்
தன் மானங் காக்கத் துணியவுமில்லை.

யுத்த அரக்கனை
எதிர்க்கப் பலமின்றி
ஓடி மறைந்த கடவுளருக்கு
சொந்தப்பதியில்
மீளக்குடியமர
துளியும் ஏனோ
இன்னும் துணிவு வரவில்லை.

அநீதியை அழிக்கும்
கடவுளரைத் தோற்றுவிக்கும்
என் கனவுகளில்
கருக்கொள்ளும் கடவுளர்களை
யாரோ கொலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment